எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை
வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்
உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல்
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்
குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்
விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்
அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்
வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை
தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதைவானுற ஓங்கி வளம் பெற வளரினும்ஒருவருக்கு இருக்க நிழல் ஆகாதே
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதைதெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடுமன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்
பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்
உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்
கொண்டோ ர் எல்லாம் பெண்டிரும் அல்லர்
அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது
சுடினும் செம் பொன் தன் ஒளி கெடாது
அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது
புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது
கலக்கினும் தண் கடல் சேறு ஆகாது
அடினும் பால் பெய்து கைப்புஅறாது பேய்ச் சுரைக்காய்
ஊட்டினும் பல் விரை உள்ளி கமழாதே
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே
சிறியோர் பெரும் பிழை செய்தனராயின் பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிது
நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மைநீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே
ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மைஇரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே
கற்கை நன்றே கற்கை நன்றேபிச்சை புகினும் கற்கை நன்றே
கல்லா ஒருவன் குல நலம் பேசுதல்நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே
நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே
எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும்அக்குடியில் கற்றோரை மேல் வருக என்பர்
அறிவுடை ஒருவனை அரசும் விரும்பும்
அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடிஎச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று
யானைக்கு இல்லை தானமும் தருமமும்
பூனைக்கு இல்லை தவமும் தயையும்
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்
சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்
முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும்
அச்சமும் நாணமும் அறிவு இல்லோர்க்கு இல்லை
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
கேளும் கிளையும் கெட்டோ ர்க்கு இல்லை
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும்
சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்அறக் கூழ் சாலை அடையினும் அடைவர்
அறத்திடு பிச்சை கூவி இரப்போர்அரசோடு இருந்து அரசாளினும் ஆள்வர்
குன்று அத்தனை இரு நிதியைப் படைத்தோர்அன்றைப் பகலே அழியினும் அழிவர்
எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்குகழுதை மேய் பாழ் ஆயினும் ஆகும்
பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடிநெற்பொலி நெடு நகர் ஆயினும் ஆகும்
மண அணி அணிந்த மகளிர் ஆங்கேபிண அணி அணிந்து தம் கொழுநரைத்தழீஇஉடுத்த ஆடை கோடி யாகமுடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்
இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே
இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே
நல்ல ஞாலமும் வானமும் பெறினும்எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே
தறுகண் யானை தான் பெரிது ஆயினும்சிறு கண் மூங்கில் கோற்கு அஞ்சுமே
நெடும் காடு ஊடே வாழினும்புன் தலைப் புல்வாய் புலிக்கு அஞ்சுமே
பள்ளத்து ஊடே வாழினும் தேரை பாம்புக்கு மிக அஞ்சுமே
கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்கடும் புலி வாழும் காடு நன்றே
சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்தேன் தேர் குறவர் தேயம் நன்றே
காலையும் மாலையும் நான் மறை ஓதாஅந்தணர் என்போர் அனைவரும் பதரே
குடி அலைத்து இரந்து வெங்கோலோடு நின்றமுடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே
முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்துஅதன் பயன் உண்ணா வணிகரும் பதரே
வித்தும் ஏரும் உளவா இருப்பஎய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே
தன் மனையாளைத் தாய் மனைக்கு அகற்றிப்பின்பு அவள் பாராப் பேதையும் பதரே
தன் மனையாளைத் தன் மனை இருத்திப் பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே
தன் ஆயுதமும் தன்கையில் பொருளும்பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே
வாய் பறையாகவும் நாக்கு அடிப்பாகவும்சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்
பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்மெய் போலும்மே மெய் போலும்மே
மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்பொய் போலும்மே பொய் போலும்மே
இருவர் தம் சொல்லையும் எழுதரம் கேட்டேஇருவரும் பொருந்த உரையார் ஆயின்மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தம்மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்முறை யுறந்தேவர் மூவர் காக்கினும்வழி வழி ஈர்வதோர் வாளாகும்மே
பழியா வருவது மொழியாது ஒழிவது
சுழியா வரு புனல் இழியாது ஒழிவது
துணையோடு அல்லது நெடு வழி போகேல்
புணை மீது அல்லது நெடும் புனல் ஏகேல்
ஏழிலார் முலைவரி விழியார் தந்திரம்இயலாதன கொடு முயல்வு ஆகாதே
வழியே ஏகுக வழியே மீளுக
இவை காண் உலகிற்கு இயலாமாறே!
(முடிந்தது).